Jyothi meena biography of mahatma

``என் வாழ்க்கைத்தான் கிளாமர் ஆர்டிஸ்டுனு முத்திரை குத்தப்பட்டுருச்சு. நீ ஹீரோயினாவோ, கேரக்டர் ரோல்களிலோ நடிச்சுப் புகழ்பெறணும்னு ஆசைப்பட்டேன். இப்படிச் சின்ன வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டு, நடிப்பை விட்டுட்டியே'னு பலமுறை அம்மா ஃபீல் பண்ணியிருக்காங்க. அதேநேரம், என் கல்யாண வாழ்க்கை சிறப்பா இருக்கிறதில் சந்தோஷப்பட்டாங்க."

Published:Updated:

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாகப் புகழ்பெற்றவர், ஜோதி லட்சுமி. அம்மாவைப் போலவே சினிமாவில் கவனம் ஈர்த்தார், மகள் ஜோதி மீனா. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கப்போகிறார். அம்மாவின் திடீர் மரணம் மற்றும் அவர் நினைவுகள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசுகிறார், ஜோதி மீனா. 

``அம்மா நடிகை, அப்பா கேமராமேன். ரெண்டு பேரும் சினிமாவில் ரொம்ப பிஸியா இருந்ததால், சின்ன வயசில் பெரும்பாலும் தனிமை உலகத்தில் வளர்ந்தேன். படிப்பின் அவசியத்தை உணரவைக்க ஆளில்லை. படிப்பிலும் நாட்டமில்லை. பத்தாவது முடிச்சதும் டான்ஸில் கவனம் செலுத்த ஆசைப்பட்டேன். `உனக்குப் பிடிச்சதை பண்ணு'னு அம்மா ஊக்கப்படுத்தினாங்க. அப்போ, `சிந்துநதி-பூ' படத்தில் ஹீரோயின் வாய்ப்பு வந்துச்சு. சின்ன வயசிலிருந்தே அம்மா டான்ஸைப் பார்த்து வளர்ந்தேன். அவங்க உடம்பின் ஒவ்வோர் அசைவும் நளினத்தை வெளிப்படுத்தும். அவங்களை மாதிரி நானும் டான்ஸில் புகழ்பெற ஆசைப்பட்டேன். அதனால், ஹீரோயின் வாய்ப்பை மறுத்துட்டேன். `ரகசிய போலீஸ்' என் முதல் படம். அப்போ 17 வயசுதான். ஒரு கட்டத்தில், கிளாமர் பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடுற மாதிரி டிராக் மாறிச்சு. என்னைப் பொறுத்தவரை, அதுவும் கேரக்டர்தான்; நடிப்புதான். சில படங்களில் கேரக்டர் ரோலில் நடிச்சேன்.

பிஸியா வொர்க் பண்ணிட்டிருந்த நேரத்தில், என் காதலரை கல்யாணம் செய்துகிட்டேன். முதலில், ரெண்டு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தாலும், பிறகு சம்மதம் கிடைச்சது. `அலைபாயுதே' படம் மாதிரிதான் எங்க கல்யாண வாழ்க்கையும். குழந்தை பிறந்ததும் பையனுக்காக நடிக்கிறதை விட்டுட்டேன். அப்போதான், என் சினிமா பயணம் கிளாமரா மட்டுமே இருந்தது தப்புனு உணர்ந்தேன். பையனை நான்தான் ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போய் வருவேன். நான் நடிகைங்கிறதை எங்கேயும் சொல்லிக்கலை. ஹவுஸ் வொய்ஃப் என்றே சொல்லிக்கிறேன். அம்மாவும் நானும் ரொம்ப குளோஸ். என் பெற்றோருடன்தான் வசிச்சோம்" என்கிற ஜோதி மீனா, தன் அம்மாவின் இறுதி நாள்கள் குறித்துப் பகிர்கிறார்.

``அவங்கதான் என் உலகம். நான்தான் அவங்க உலகம். நான் நடிக்கலையே தவிர, அவங்க நடிப்பு ஆர்வத்துக்கு இயன்ற வரை உதவினேன். ஹெல்த் விஷயத்தில் அம்மா ரொம்பவே கவனமா இருப்பாங்க. ஒரு கொசுகூட கடிக்காமல் இருக்கணும்; காய்ச்சல், தலைவலிகூட வரக் கூடாதுனு நினைப்பாங்க. மாதம் தவறாமல் உடல்நலத்தைப் பரிசோதனை செய்துப்பாங்க. அவங்களை அடிக்கடி கிண்டல் பண்ணுவேன். சினிமா, சீரியல்னு பிஸியா வொர்க் பண்ண ஆசைப்படுவாங்க. அதுக்கு, உடல்நலம் ஒருபோதும் தொந்தவு செய்யக் கூடாதுனு நினைப்பாங்க. சினிமாவை அவ்வளவு காதலிச்சாங்க. ஒருநாள் ஷூட்டிங் முடிச்சுட்டு வந்தவங்க, டயர்டா இருக்குனு சொன்னாங்க. அடுத்த நாளே காய்ச்சல். டாக்டரான என் கணவர் அம்மாவுக்கு முதலுதவி செய்ததும் ஆஸ்பத்திரிக்குப் போனோம். அப்போதான் அவங்களுக்கு ரத்தப் புற்றுநோய் இருக்குனு தெரிஞ்சது. எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி. 15 நாள் ட்ரீட்மென்ட் முடிஞ்சு, வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தோம். கணவருக்குத் தெரிஞ்ச கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் ஒருத்தரும் ட்ரீட்மென்ட் கொடுத்தார். ஆனாலும் அம்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படலை.

ஒரு நாள் என் நைட்டியைப் உடுத்திக்க ஆசைப்பாட்டாங்க. `எனக்குப் பருமனான உடல். உங்க ஒல்லி உடம்புக்கு செட் ஆகாதுமா'னு சொன்னேன். அடம்பிடிச்சு என் நைட்டியை உடுத்திக்கிட்டாங்க. பாத்ரூம் போயிட்டுவந்து, என் மடியில் தலைசாய்ந்தாங்க. சில நிமிடத்தில் அவங்க உயிர் பிரிஞ்சுடுச்சு. கதறி அழுதேன். கேன்சர் வந்த 20 வது நாளிலேயே அவங்க வாழ்க்கை முடிஞ்சுடுச்சு. அம்மாவுக்கு வந்தது, லுக்கிமியா வகை கேன்சர். கேமரா ரேடியேஷன் தாக்கத்தால் இந்தப் புற்றுநோய் வந்திருக்கலாம்னு டாக்டர்கள் சொன்னாங்க. வார்த்தைகளில் சொல்லத் தெரியலை. தினமும் அவங்களை நினைச்சு வருந்திக்கிட்டே இருந்தேன். அவங்க என் முன்னாடி நின்னு பேசுற மாதிரி, அழற மாதிரியே இருந்துச்சு. அப்புறம், கணவர் குழந்தைகளுடன் வேறு வீட்டுக்கு ஷிஃப்ட் ஆகிட்டோம்" எனச் சற்றே மெளனமாகிறார்.

மீண்டும் நடிக்க முடிவெடுத்திருப்பது பற்றிக் கூறுபவர், ```என் வாழ்க்கைத்தான் கிளாமர் ஆர்டிஸ்டுனு முத்திரை குத்தப்பட்டுருச்சு. நீ ஹீரோயினாவோ, கேரக்டர் ரோல்களிலோ நடிச்சு புகழ்பெறணும்னு ஆசைப்பட்டேன். இப்படிச் சின்ன வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டு, நடிப்பை விட்டுட்டியே'னு பலமுறை அம்மா ஃபீல் பண்ணியிருக்காங்க. அதேநேரம், என் கல்யாண வாழ்க்கை சிறப்பா இருக்கிறதில் சந்தோஷப்பட்டாங்க. அம்மா ஆசையை நிறைவேற்ற முடியலையேனு வருத்தம் உண்டு. அம்மாவின் இழப்பை தாங்கிக்கவே முடியலை. கவர்மென்ட் டாக்டரான கணவரும், டாக்டருக்குப் படிக்கும் பையனும் காலையில் கிளம்பினால் நைட்டுதான் வருவாங்க. அதுவரை அம்மாவின் நினைவுகளால் வருத்தப்பட்டுட்டே இருந்தேன். அதிலிருந்து விடுபடறதுக்காகவே, 17 வருஷத்துக்குப் பிறகு மறுபடியும் நடிக்க முடிவெடுத்தேன். இப்போ நான் ஒரு பெரிய பையனின் அம்மா. முன்புபோல டான்ஸ் ஆட முடியாது. சினிமாவோ, சீரியலோ மக்கள் மனசுல நிற்கும் அம்மா, அக்கா கேரக்டர்களில் நடிக்க முடிவெடுத்திருக்கேன். மிஸ் யூ அம்மா. லவ் யூ அம்மா" என நெகிழ்கிறார் ஜோதி மீனா.